செய்திகள்

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்: மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது

செங்கல்பட்டு, பிப்.19–

ஹைபிரிட் ராக்கெட் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட், இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஹைபிரிட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், இது செயற்கைகோள்களின் தரவுகளை சேகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *