ஸ்டாலின் நன்றி
சென்னை, செப். 20–
100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
‘‘மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1924 செப்டம்பர் 20 அன்று, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷலது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.
சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷலின் முழுவுருவச் சிலையினைத் தமிழ்நாட்டில் நிறுவியும் கொண்டாடப்படும் என எனது அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.