நியூயார்க், நவ. 22–
இத்தாலிய ஓவிய கலைஞரான மவுரிசியோ கட்லெலனின், ஒரு வாழைப்பழ ஆர்ட்டை, கிரிப்டோ கரன்சி ஜாம்பவானான ஜஸ்டின் சன் ரூ. 52 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
இத்தாலிய கலைஞரான மவுரிசியோ கட்லெலனின் `காமெடியன்’ எனும் கருத்தியல் கலைப்படைப்பு, நேற்று நியூயார்க்கில் நடந்த சோதேபியின் ஏலத்தில் $6.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இப்படைப்பானது ஓர் ஒற்றை வாழைப்பழத்தை டக்ட் டேப் (duct tape) கொண்டு தரையில் இருந்து சரியாக 16cm உயரத்தில் ஓர் சுவற்றில் ஒட்டப்பட்டதாகும்.
ஒரு வாழைப்பழம் ரூ.52 கோடி
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே படைப்பு $120,000-க்கு விற்பனை ஆனபோது, அது சமுக வலைதளத்தையே புரட்டிப்போட்டது. மேலும் அக்கலையின் அர்த்தம் குறித்த பெரும் விவாதமும் எழுந்தது. ஒரு வாழைப்பழத்துக்கு இந்தனை விலையா என்று விவாதங்கள் களைகட்டியது. ஆனால் இன்று இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,37,38,566 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. $1 மில்லியன் முதல் $1.5 மில்லிலன் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்த்து $ 800,000 இல் ஏலத்தை தொடங்கிய ஏல நிறுவனத்துக்கே இது மிகப்பெரிய அதிர்ச்சி.
ஏலதாரர் ஆலிவர் பார்கர் இப்படைப்பை `iconic’ மற்றும் `disruptive’ என்று குறிப்பிட்டு, “ஏலத்தில் ஒரு வாழைப்பழத்தை விற்பது, நான் என்றும் சொல்ல நினைத்திராத வார்த்தைகள்” என்று வேடிக்கையாகக் கூறினார். இப்படைப்பை பெற்றவர் சீன சேகரிப்பாளரும், டிரான் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சி தளத்தை நிறுவியவருமான ஜஸ்டின் சன் ஆவார்.
இது குறித்து ஜஸ்டின் சன் கூறுகையில், “இது ஓர் கலைபடைப்பு மட்டும் அல்ல, இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோகரன்ஸி சமூகத்தை ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வை பிரதிபலிக்கிறது. இப்படைப்பு எதிர்காலத்தில் இன்னும் பல சிந்தனைகளையும் விவாதங்களையும் ஊக்குவிக்கும் என நான் நம்புகிறேன். மேலும் இது வரலாறின் ஒரு பகுதியாகும் என நான் நம்புகிறேன்” என்றார்.