சென்னை, ஜூலை 10–
இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ கோர்ட் முடித்து வைத்துள்ளது.
சென்னை, என்.எஸ்.சி. பொஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோவிலை காணவில்லை எனவும், நூறாண்டு பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி, குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், கோவில் அமைந்திருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீண்டும் கோவில் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.