சென்னை, ஜூலை 7–
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்லும் நிலையில், 13ந் தேதி வரை அங்கு முகாமிட்டு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. முதலமைச்சர் தொடங்கி, சபாநாயகர் அப்பாவு வரை, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர்.
மாலை டெல்லி பயணம்
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5 மணி அளவில் விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் இருக்கும் அவர், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து அவருடன் ஆலோசனை நடத்தி, செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.