சென்னை, ஏப். 8–
அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்து கொண்டு, தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அவர் இருப்பது ராஜ்பவன், ‘ரவி பவன்’ அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார். ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தும் ஆளுநர் செயல்பாட்டில் மாற்றம் இல்லை. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆளுநரின் போக்குக்கு எதிராக வரும் 12-ஆம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
கொச்சைப்படுத்தும் ஆளுநர்
இந்நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆளுநரின் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரின் பேச்சைக் கண்டித்துமக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதை விடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
‘ரவி பவன்’ அல்ல
வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழ்நாடு காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா? என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அடிப்படையையே இந்தப் பேச்சு குழிதோண்டி புதைத்துவிடும்.
அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், ‘ரவி பவன்’ அல்ல என்பதை ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.