செய்திகள்

ஆளுநர் நிகழ்ச்சியில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

Makkal Kural Official

மதுரை, டிச. 02–

மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது.

தமிழ்நாட்டில் அரசு விழாக்கள், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்றும் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் ஆணையாக உள்ளது. மிக நீண்ட காலமாக இந்த முறை பள்ளிகளில் மட்டுமல்லாது, அரசு நிகழ்ச்சிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. ஆளுநர் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழிலேயே, நிகழ்ச்சியின் தொடக்கமாக தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

ஆளுநர் விழாவில் குழப்பம்

ஆனால் திடீரென, தேசிய கீதத்திற்கு பதில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் இரண்டு வரிகள் பாடியதும் இடையில் நிறுத்தப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. விழாவின் இறுதியில் வழக்கம் போல் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக சில வாரங்கள் முன், பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சர்ச்சை எழுந்தது. பாடலில், ‘‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’’ என்கிற வரியை பாடாமல் வேண்டுமென்றே விட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *