செய்திகள்

ஆயுத உதவி கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து பயணம்

லண்டன், பிப். 9–

ரஷ்யாவுக்கு எதிரான போரிட ஆயுதங்கள் வழங்கக் கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாடும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஜெலன்ஸ்கி

இந்த நிலையில் போர் தொடங்கி இரண்டாவது முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். கடந்த முறை அமெரிக்கா சென்று ஆயுத உதவியை பெற்ற உக்ரைன் அதிபர், இம்முறை இங்கிலாந்து சென்றார். தற்போது இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் துருப்புக்களை, அதிபர் ஜெலன்ஸ்கி பார்வையிடுவார் என்றும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜெலென்ஸ்கியின் இங்கிலாந்து பயணம், அவரது நாட்டின் தைரியம், உறுதிப்பாடு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சண்டையின் ஒரு சான்றாகவும் இருக்கும் எனவும், நமது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உடைக்க முடியாத நட்புறவுக்கான சான்றாகவும் உள்ளது எனவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *