புதுடெல்லி, நவ. 7–
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
One Rank One Pension (OROP) திட்டம் அமலாக்கப்பட்டதன் 10வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இதே நாளில்தான் One Rank One Pension (OROP) திட்டம் அமல்படுத்தப்பட்டது. நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கும் நமது படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை.
OROP-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு என்பது, நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கும், நமது மாவீரர்களுக்கு நமது தேசத்தின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பங்கள் இந்த முக்கிய முயற்சியால் பயனடைந்துள்ளனர் என்பது உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும். எண்களுக்கு அப்பால் OROP என்பது நமது ஆயுதப்படைகளின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனை உறுதிப்படுத்தவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “One Rank One Pension என்பது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நியாயமான மற்றும் சமமான ஓய்வூதியத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். ஒரே பதவியில் மற்றும் ஒரே அளவிலான சேவையில் ஓய்வு பெறும் படைவீரர்களுக்கு அவர்களின் ஓய்வு தேதியைப் பொருட்படுத்தாமல் சமமான ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.