செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது: 100 பயங்கரவாதிகள் பலி

Makkal Kural Official

புதுடெல்லி, மே 8–

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று முன் தினம் நள்ளிரவு அதிரடி தாக்குதலை நடத்தியது.

இதில் ஜெய்ஷ்–ஏ–முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஏற்பாடு செய்தது.

அதன்படி டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

90 நிமிடங்கள் கூட்டம்

90 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் ராணுவம் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அரசு தரப்பில் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். ராணுவம் எடுத்த நடவடிக்கை குறித்து அவர் பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ– முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், துணை நிற்பதாகவும் தெரிவித்தார்

பாகிஸ்தான்

ஏவுகணையை அழித்தது

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது.

பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது.

பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் – பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே வயல்வெளியில் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்–15இ ஏவுகணை எனத் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் ஜே–10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பின் பெரோஸ்பூர் பகுதியில் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச எல்லையைக் கடந்து அவர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது பிஎஸ்எப் படையினர் அவரை சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *