விரைவில் பதில் அளிக்கப்படும் என அரசு தகவல்
சென்னை, நவ.25-–
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டில் பலரும் ஈடுபட்டு பணத்தை இழந்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பலரும் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது.
அதன்படி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டு வரப்பட்டது.
அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. அந்த அவசர சட்டத்தில், அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன. மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டு இருந்தது.
குரல் வாக்கெடுப்பில்
நிறைவேற்றம்
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 17-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அக்டோபர் 19-ந் தேதியன்று அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக கவர்னர் அலுவலகத்திற்கு அந்த சட்ட மசோதா அக்டோபர் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
கவர்னரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நிரந்தர சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரும். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவசர சட்டத்துக்கான ஒப்புதலை அது சமர்ப்பிக்கப்பட்ட அன்று மாலையிலேயே கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தார். அந்த அவசர சட்டத்தில் இருக்கும் அதே ஷரத்துகள்தான் சட்ட மசோதாவிலும் உள்ளன. எனவே அதில் அரசிடம் அவர் கேள்வி கேட்பதற்கோ அல்லது அதில் சந்தேகங்களை எழுப்பு வதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனாலும் அதற்கு ஒப்புதலை அளிக்காததால், கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். அவருக்கு சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்துவோம் என்று கூறியிருந்தார்.
கவர்னர் கடிதம்
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கவர்னர் கேட்டுள்ள விளக்கங்களுக்கு உடனே பதில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக சட்டத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
ஆனால் கவர்னர் என்ன விளக்கம் கேட்டு உள்ளார் என்ற தகவல்கள் வெளியாக வில்லை.