செய்திகள்

ஆதித்யா விண்கல சுற்றுப் பாதை 4 ஆவது முறையாக அதிகரிப்பு

இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு

பெங்களூரு, செப். 15–

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக நான்காவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ஆம் தேதி ஆதித்யா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீ. அதிகபட்சம் 19,500 கி.மீ.தொலைவில் உள்ள புவி நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

125 நாள்கள் பயணத்துக்கு பின்னர், ஜனவரி தொடக்கத்தில் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் எல்-1 பகுதியில் விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது.

அதற்கேற்ப தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘ஆதித்யா’ விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஏற்கெனவே 3 முறை அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

4 வது முறையாக உயர்வு

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆதித்யா’ விண்கலம் புவிக்கு அருகே வரும்போது, அதிலுள்ள உந்துவிசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை ஏற்கெனவே 3 முறை மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக இன்று 4வது முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 71,767 கி.மீ தொலைவும், அதிகபட்சம்1,21,973 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5வது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் பின்னர் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் சூரியனை நோக்கி லாக்ராஞ்சியன் புள்ளிக்கு (எல்1) பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *