சென்னை, மார்ச் 3–
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது மெயின் ரோட்டில் வசித்து வரும் கண்ணன் (27 வீட்டையொட்டி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இரவு கண்விழித்து, மறுநாள் அதிகாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பெட்டிக்கடையின் கதவு உடைக்கப்பட்டு, அதன் வழியாக வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் வைத்திருந்த 3 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல், 20 கிராம் வெள்ளி காப்பு, பணம் ரூ.2,000 , 1 செல்போன் மற்றும் 1 ஏடிஎம் கார்டு ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கண்ணன், ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீகாந்த் (19), பாலாஜி (எ) கிட்டு (19), வசந்த் (24) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல், 20 கிராம் வெள்ளி காப்பு, பணம் ரூ.2,000, 1 செல்போன் மற்றும் 1 ஏடிஎம் கார்டு ஆகியவை மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.