சிறுகதை

ஆடைகள் …! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

..

‘‘ரெண்டு ரெண்டு டிரஸா எடுத்திட்டு போங்க. மொத்தமா எடுத்துட்டு போக கூடாது”

என்று டிரெஸ்ஸிங் டிரெய்லர் ரூம் பக்கம் நின்று கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள் வனிதா

மொத்தமா எடுத்துட்டு போனா என்னவாம்? போட்டுப் பாக்கத்தானே போறாேம். திருடிட்டா பாேகப் பாேறோம்?”

என்று அவளுடன் வாதாடி கொண்டிருந்தான் ஜெய்.

” இல்ல சார். ரெண்டு ரெண்டா தான் எடுத்துட்டு போகணும்ன்னு ரூல்ஸ் போட்டு இருக்காங்க .இத நான் சொல்லல. நிர்வாகம் சொல்லுது. அத நான் செய்றேன். என்கிட்ட காேபப்பட்டு என்ன பிரயாேசனம் “

என்று சொன்ன வனிதாவை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு இரண்டு சட்டைகளையும் மட்டும் எடுத்துப் போனான் ஜெய்.

முழுவதும் குளிரூட்டப்பட்டு விரிந்து பரந்து கிடந்த அந்த ஜவுளி நிறுவனத்தில் ஆட்கள் குழுமிக் கிடந்தார்கள். அவரவர்களின் தேவைகளுக்கு தகுந்த மாதிரி உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜெய் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருந்த டீ சர்ட், சட்டைகளை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டு டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று அத்தனையும் பாேட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். நிறையப் பேர் வெளியில் நின்று கொண்டிருந்தார்கள்.

” இவரு எடுத்து வச்சிருக்கிற டிரஸ் மொத்தமும் போட்டுப் பாக்குறதுக்கு எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆயிரும் போல . இவர் இன்னைக்கு இந்த ரூம விட்டு வந்த மாதிரி தான். நாம அடுத்த ரூம பாக்கலாம்”

என்று சிலர் ஜெய் இருக்கும் ரூமை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றார்கள் .

ஜெய் ஒவ்வொரு டிரசாக எடுத்துப் போட்டு அங்கிருக்கும் கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான். தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. . ஆனால் ஒவ்வொரு டிரெஸ்ஸையும் போட்டுப் பார்த்து தன்னை முழுவதுமாக ரசித்துப் புன்னகையாேடு வெளியில் வந்தான்.

இது வனிதாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் எதுவும் பேச முடியாது என்பதில் கவனமாக இருந்தாள்.

” எவ்வளவு நேரம் நிக்க முடியும். அவர கொஞ்சம் வெளியே வர சொல்லுங்க”

என்று நின்று கொண்டிருந்த ஆட்கள் சொல்ல லேசாக கதவைத் தட்டினாள் வனிதா.

” சார் சீக்கிரமா வாங்க .ஆள் நிறைய இருக்காங்க .இது பண்டிகை நேரம் . நிறைய பேர் வெயிட் பண்றாங்க”

என்று வனிதா கத்திப் பார்த்தும் புது டிரஸைப்போட்டு முன்னும் பின்னும் திரும்பிச் சிரித்து, சில முகபாவனைகள் செய்து கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.

வந்திருந்தவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் நேரடியாக எதுவும் பேச முடியாது என்பதால் அவர்கள் வனிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அந்த அறையில் இருந்து வெளியே வந்தான் ஜெய்.

இந்த டிரஸ் எனக்கு பிடிச்சிருக்கு. இத எடுத்துக்கிறேன்”

என்று ஜெய் சொல்ல, வாய் திறந்து பேசாமல் தலையை மட்டுமே ஆட்டினாள் வனிதா

சில பெண்கள் நவீன உடைகளை எடுத்துக் கொண்டு டிரெஸ்ஸிங் ரூம் சென்று தங்கள் உடைகளைப் பாேட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தனையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வனிதா

” நீங்க இந்த ஜவுளிக்கடைல தான் வேல பாக்குறீங்களா ?”

என்று நிறைய ஆடைகளை அள்ளி வந்த ஒரு பெண் கேட்க

” ஆமா” என்று தலையாட்டினாள் வனிதா

” எவ்வளவு வருஷமா வேலை பாக்குறீங்க ?

என்று மறுபடியும் அந்தப் பெண் கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் தலையாட்டினாள் வனிதா

” ஏங்க பேச மாட்டேங்கிறீங்க?

என்று அந்தப் பெண் விடாப்படியாக கேட்க

“நான் பேச கூடாதுங்க .கேமரா இங்க இருக்கு பாருங்க. நான் வாடிக்கையாளர்கிட்ட பேசினது தெரிஞ்சா, என்னய வேலைய விட்டுட்டு தூக்கிருவாங்க”

என்று வனிதா சொல்ல,

நாம் என்ன கேட்டாேம் ? நல்லது தானே கேட்டோம்? தப்பா எதுவும் கேட்கலையே? இதுக்கு இவ்வளவு பயப்படுறாங்க?

என்று நினைத்த அந்தப் பெண் தான் தேர்ந்தெடுத்த ஆடைகளை எடுத்துக் கொண்டு டிரஸிங் ரூம் உள்ளே சென்றார்.

எப்படி எல்லாம் டிரஸ் எடுக்கிறார்கள். அந்த டிரஸ்கள் எல்லாம் எப்பிடி இருக்கும் என்று தனக்குத் தானே கற்பனை செய்து கொண்டாள் வனிதா.

” டிரஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்குன்னே எடுத்து தச்சது மாதிரி இருக்கு. அத்தனையும் சிறப்பு . பில் எங்க போடுறது? “

என்று ரைட்டு போயிட்டு லெப்ட் போங்க என்று வனிதா சொல்லும் பாேதே அங்கு, ஏற்கனவே கூட்டம் குழுமி இருந்தார்கள் .வரிசையில் நின்று பில் போட.

“பை வேணுமா ? “

என்று பில் போடும் பெண் கேட்க

” என்ன பை?

” நீங்க வாங்கன துணிகள எடுத்துட்டு போறதுக்கு ?

” ஏன் துணி உங்க கடையில எடுக்கிறோம். அதுக்கு நீங்க பை தர மாட்டிங்களா ? ஹாேட்டல் வச்சிருந்தா சாப்பிட எலை எடுத்திட்டு வான்னு சொல்லுவீங்க போல “

என்று கொஞ்சம் கோபமாக அந்தப் பெண் கேட்க, சுற்றி இருந்தவர்களும்

அதற்கு ” ஆமா”

என்று தலையாட்டினார்கள்.

” இவ்வளவு டிரஸ் எடுக்குறாேம்.. ஒரு பை குடுக்கிறதுல என்ன குறைச்சல் ?”

என்று அவர்களும் அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகப் பேசினார்கள் .

“எங்களுக்கு தெரியாதுங்க.அத நீங்க முதலாளி கிட்ட தான் கேக்கணும். அவங்க என்ன சொல்றாங்களோ ? அத தான் நாங்க செய்றாேம் “

என்று தன் பக்கம் உள்ள நியாயத்தைச் சொன்னாள் அந்தச் காசாளர் பெண்.

” தனக்கான தொகையைக் கொடுத்துவிட்டு, சற்றுக் காேபத்துடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அந்தப் பெண்.

பாேகும் பாேது, டிரெஸ்ஸிங் டிரைலர் ரூம் அருகே நின்று கொண்டிருந்த வனிதாவைப் பார்த்தாள்.

வெளியே நின்று கொண்டு மறுபடியும்

” ரெண்டு டிரஸ் மட்டும் உள்ள எடுத்திட்டு போங்க. “

என்று ஆட்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வனிதா

விதவிதமான ஆடைகள், செருப்புகள் என்று அங்கு வந்திருந்த ஆண்கள் ,பெண்கள் எல்லாம் அதைப் போட்டுப் பார்த்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

இதை எல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் வனிதா . அவளுக்குள் உள்ளூர கவலை கவ்வியது.

” நாம இங்க சம்பளம் வாங்குற ஊழியரா தான் இருக்காேம். ஆனா, இங்க இருக்கிற ஆடைகளை வாங்கிப் போட முடியலயே? வாங்குற சம்பளத்துக்கு வாழ்க்கை நடத்துவதற்கே சரியா போகுது. இதில நாம எங்க புது டிரஸ் எடுத்துப் போடுறது?

என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள் வனிதா.

இரவு பத்து மணியானது . கடையை அடைக்கும் நேரம் நெருங்கியது. தனக்குத் தேவையான எல்லா ஆடைகளையும் எடுத்து டிரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்று அத்தனை ஆடைகளையும் போட்டுக் கண்ணாடியில் பார்த்துச் சந்தோஷப்பட்டாள் வனிதா. அத்தனையும் அழகாக இருந்தன. மனதுக்குள் மகிழ்ச்சி முளைத்தது.

இந்த ஆடைகள் எல்லாம் மற்றவர்களுக்கு தான் நமக்கில்லை. மறுபடியும் அத்தனை ஆடைகளையும் களைந்து விட்டு தன் ஆடையைப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள் வனிதா

” என்ன வனிதா, நேரமாச்சு ? வீட்டுக்கு போகலாமா?

என்று அங்கு பணிபுரியும் ஒரு பெண் கேட்க

“போகலாம் “

வனிதா சொல்லும் போதே அவள் வார்த்தையில் ஈரம் அப்பியிருந்தது.

மறு நாள். அதே இடம் .

” சார் ரெண்டு டிரெஸ் மட்டும் தான் எடுத்துட்டு போகணும். மொத்த டிரஸ்ம் எடுத்துட்டு போக கூடாது. ரெண்டு ரெண்டாக போட்டு பாருங்க “

என்று வனிதா சொல்ல

ஒரு பெண் தனக்கான ஆடைகளை எடுத்துக்கொண்டு டிரெஸிங் ரூமூக்குள் சென்றாள் ஒரு பெண்

அவள் அள்ளிப் போன அத்தனை ஆடைகளும் அவ்வளவு அழகாக இருந்தன .

இன்று இரவு பத்து மணிக்கு மேல் ஒவ்வொரு ஆடையாகப் எடுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியதுதான் வனிதாவுக்குள் சந்தோஷம் துளிர்விட்டது.

” மேடம் ரெண்டு டிரெஸ் மட்டும் எடுத்துட்டு போங்க”

என்று சொன்னாள் வனிதா

அன்று இரவு மணி பத்தைத் தொடப் போனது . கடை அடைப்பதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகின

மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாள் வனிதா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *