ஹாங்சோவ், செப். 27–
ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது. இதன்மூமல் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது.
5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். 50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிப்த் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.
50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சிப்த் கௌர் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இதன் மூலம் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என் 19 பதக்கங்களை வென்றுள்ளது.