செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வருவதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Makkal Kural Official

அரியலூர், டிச.7-–

அண்ணா தி.மு.க. ஆட்சி மீண்டும் வருவதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அரியலூரில் நடந்த தாமரை ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரியலூர் மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன்- – ராஜேஸ்வரி தம்பதியின் மகள் பார்கவிக்கும், அண்ணா தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தளி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் – -இந்திரா தம்பதியின் மகன் மதன்ராஜுக்கும் திருமணம் அரியலூர் கொல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஆர்.டி.சி. இறைவன் நகரில் அமைக்கப்பட்டிருந்த அம்மா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்கள் மதன்ராஜ்-பார்கவியின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். விழாவுக்கு வந்திருந்தவர்களை தாமரை ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-–

இது மணவிழாவா, அண்ணா தி.மு.க. மாநாடா என்று அரியலூர் மாவட்டமே வியக்கின்ற அளவுக்கு இந்த திருமண விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. மணமக்கள் எல்லா வளங்களும், செல்வங்களும், புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். தாமரை ராஜேந்திரன் ஆரம்ப காலத்தில் இருந்து அண்ணா தி.மு.க.வுக்காக பாடுபட்டு வருகிறார். மேலும் அவர் அரியலூர் மாவட்டத்தை அண்ணா தி.மு.க.வின் கோட்டை என்று பல காலக்கட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூச்சுக்கு 300 முறை பேசுகிறார், 40-க்கு 40 வெற்றி பெற்று விட்டோம் என்று. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. 100-க்கு 100 சதவீதம் வெற்றி பெற்று விட்டது. 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சி காலத்திலும் அரியலூர் மாவட்டம் அண்ணா தி.மு.க. கோட்டை என்று பல்வேறு காலக்கட்டத்திலும் தாமரை ராஜேந்திரனால் நிரூபித்து காட்டப்பட்டது.

மேலும் தாமரை ராஜேந்திரன் கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் அரியலூர் மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்து கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னை சந்திப்பார். அப்படி சுறுசுறுப்பாக அரியலூர் மாவட்ட மக்கள் மீது அன்பு கொண்டு, இந்த மாவட்டம் வளர வேண்டும். இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தாமரை ராஜேந்திரன் சிறப்பான முறையில் செயல்பட்டதின் காரணத்தினால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.

அவரது கோரிக்கையை ஏற்று அரியலூர் மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகள் புதிதாக போடப்பட்டன. மேலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் அரியலூர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்து கொடுத்தோம். ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரி கொண்டு வந்தோம். இதேபோல் பல்வேறு நலத்திட்டங்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் தான் அரியலூர் மாவட்டம் தற்போது மற்ற மாவட்டங்களுக்கு முதன்மையாக திகழ்ந்து வருகிறது.

ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் எந்தவித நலத்திட்டங்களும் செயல்படுத்தவில்லை என தவறான, பொய்யான தகவல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருவது கண்டனத்துக்குரியது. எனது தலைமையிலான அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்தோம். வேளாண், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் 6 சட்டக்கல்லூரிகள் ஆகியவற்றை கொண்டு வந்தது தான் அண்ணா தி.மு.க. ஆட்சியின் சாதனை.

ஆனால் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 43 மாதத்தில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட அவரால் கொண்டு வர முடியவில்லை. எல்லாமே அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா காண்கிற ஆட்சி தான் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி.

இன்றைக்கு மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தி.மு.க. ஆட்சி இருந்தபோது இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று உதவி செய்யப்பட்டது. அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் ரூ.186 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் மு.க.ஸ்டாலின் மறந்து பேசி வருகிறார்.

அண்ணா தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கின்ற கட்சி. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக பாடுபடுகின்ற அண்ணா தி.மு.க.வின் ஆட்சி மீண்டும் வருவதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு தாமரை ராஜேந்திரனால் விநாயகர் மரச்சிற்பம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆளுயர மாலையும், கிரேன் உதவியுடன் பிரமாண்ட மாலையும் அணிவிக்கப்பட்டது. இதில் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், காமராஜ், ப.மோகன், சின்னையன், கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன், முன்னாள் அண்ணா தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *