விருதுநகர், அக். 15–
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர்தப்பினர்.
திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் தனது உறவினர் மகன் மனோஜ் என்பவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு உறவினருடன் திருப்பூருக்கு நேற்று மாலை தனது காரில் புறப்பட்டார். தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி விலக்கு அருகே கார் வந்தபோது இன்ஜினில் தீப்பற்றியது.
உடனடியாக காரை சாலையில் நிறுத்தி விட்டு சுரேஷ் மற்றும் காரில் இருந்தவர்கள் இறங்கினர். அதையடுத்து, கார் முழுவதுமாக தீப்பற்றியது. தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.