காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை
சண்டிகர், செப். 28–
அரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சாரங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சண்டிகரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
500 யூனிட் இலவச மின்சாரம்
அரியானாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, ரூ. 500 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் பேருக்கு அரசு வேலை, 500 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியானாசட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. சண்டீகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.