இந்திய வானிலை மையம் தகவல்
சென்னை, அக். 19–
அரபிக்கடல், வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14 ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி 17 ந் தேதி கரையை கடந்தது.
இந்நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு மழை
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
‘மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது’. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.