செய்திகள்

அரசு கேபிள் டி.வி. சேவையில் பாதிப்பு: 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்

தமிழக அரசு தகவல்

சென்னை, நவ. 20–

மென்பொருள் சேவையை தனியார் நிறுவனம் நிறுத்தியதால் அரசு கேபிள் டி.வி. சேவையில் ஏற்பட்ட பாதிப்பு 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மென்பொருள் (சாப்ட்வேர்) சேவைகளை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வந்தது. அந்த நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மென்பொருள் சேவையை நிறுத்தியது. இதனால் கேபிள் டி.வி. நிறுவனம் சேவையில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேனல்களை பார்க்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்காக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு, பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளை விரைவாக செய்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நேற்று முதல் (19–ந்தேதி) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது.

பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்.

அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *