சென்னை, பிப் 8–
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அங்கு பணியுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தான். இந்தத் தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் காலாவதி ஆகி ஓராண்டு கடந்த நிலையிலும், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் போடப்படவில்லை. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட நிலையில், 6 மாதங்கள் ஆகியும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது என்றும், பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதிலேயே அரசு குறியாக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரசு போக்குவரத்துக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாகவும், மாதச் சம்பளத்தை வழங்கவே அரசிடம் கடன் பெற வேண்டியிருப்பதாகவும், சில தொழிற்சங்கங்கள் தங்கள் தொழிற்சங்கம் சார்பில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதற்கிடையே தேர்தல் நடத்தி 51 விழுக்காடு வாக்குகள் பெறும் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சனைகளால் புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தள்ளிப் போவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை இழுத்தடிப்பதற்கு…
பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கு இவையெல்லாம் காரணங்களாக சொல்லப்பட்டாலும், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப்பேசி போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மேலும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.