செய்திகள்

அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல்

Makkal Kural Official

திருச்சி, செப். 19–

திருச்சி அருகே அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் 15 ரூபாய்க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வந்தள்ளது. அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களையும், அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது.

ஓட்டலுக்கு சீல்

இந்த நிலையில், துணை வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை விற்பனை செய்த தனியார் உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், 115 முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது மட்டுமல்லாமல், ஹோட்டல் உரிமையாளர் ரத்னத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலெக்டர்

எச்சரிக்கை

அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில், அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்றவர் யார், விற்பனை செய்தவர் இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் விற்றார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கும் விற்பனை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டல் உரிமையாளரிடம் அரசு முட்டைகளை அவருக்கு விற்றது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *