புதுடெல்லி, டிச. 6–
அதானி லஞ்ச விவகாரத்திற்கு எதிராக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.
நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தி வாயில் கருப்புத் துணி கட்டி பேரணியாகச் செல்கின்றனர். அதானி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அதானி விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு மீறப்படுவதாக வலியுறுத்தி அரசமைப்புப் புத்தகத்துடன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.