சென்னை, ஏப். 28–
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக புதுச்சேரி செல்லும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.50 மணிக்கு புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது மேல்பாக்கம் வளைவு என்ற இடத்திற்கு சென்றபோது சிக்னல் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. வெகுநேரம் ஆனபிறகும் சிக்னல் சரிசெய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் சிறிது தூரம் சென்று பார்த்தபோது அங்கு ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டவாளத்தை ஆய்வு செய்தபோது, இதேபோல் சுமார் 5 இடங்களில் கற்கள் மற்றும் போல்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அனைத்து கற்கள் மற்றும் போல்டுகளை அப்புறப்படுத்திய பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அரக்கோணம் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலை கவிழ்க்க சதி வேலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.