கோவிந்தன் தனதுவீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டியை எடுத்து வழக்கம் போல் சந்தைக்கு புறப்படதயாரானார் அப்போது “தாத்தா ” என்று தனது பேரன் ரவியின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் .
“என்னப்பா?” என்று கேட்க “தாத்தா இன்னிக்கு நானும் உங்களோட சந்தைக்கு வர்றேன்”
“ஏம்பா எதுக்கு ?”
நானும் வீட்டிலே சும்மாதானே இருக்கேன்! அதுவும் இன்னிக்கு ஸ்கூல் லீவு வேற போரடிக்குது தாத்தா!”
“சரி, சரி! வா “என்று கோவிந்தன் தனதுபேரன் ரவியை மாட்டுவண்டியில் ஏறச் சொன்னார். அவனும் மகிழ்ச்சி பொங்க வண்டியில் ஏறிக் கொண்டான்.
பேரன் ரவி மாட்டுவண்டியில் உட்காரவும் வண்டியை கிளப்பினார் கோவிந்தன் தாத்தா
“தாத்தா சந்தையில் இன்னிக்கு என்ன சாமான்கள் வாங்கப் போறீங்க?”எனக் கேட்டான் பேரன் ரவி.
“மாட்டுக்கு தீவனமும் வீட்டுக்கு தேவையான சாமான்களும் நம்ம விவசாய வேலைக்கு புதுசா மண்வெட்டி, கடப்பாரை தட்டுமுட்டுச் சாமான்கள் இப்படி ஒவ்வொரு முக்கியமான பொருள்கள் வாங்கனுப்பா ” என்றார் கோவிந்தன்.
“சரிங்க தாத்தா பத்தாம் வகுப்பு படிக்கிற உங்க பேரன் எனக்கு ஒன்னும் இல்லையா? என்னை மறந்துட்டீங்களே’’
“என்னோட பேரனை எப்படி மறக்க முடியும்? சந்தையில் உனக்கு என்ன வேணுமுன்னாலும் கேளு நான் வாங்கித் தர்றேன்பா”
மிட்டாய், முறுக்கு, ரொட்டி ,தின்பண்டங்கள் பள்ளிக்கூட படிப்புக்கு நோட்டு எல்லாம் வாங்கித்தர்றேன்டா “என்றார்
“சரிங்க தாத்தா நான் எனக்கு தேவையானதை சந்தையில வந்து வாங்கிக்கிறேன் தாத்தா “
தாத்தாவும் பேரனும் பேசிக்கொண்டே வந்தனர். இதை வண்டியை இழுக்கும் மாடு கேட்டுக்கொண்டு வருவதுபோல் அவர்களுக்கு இருந்தது !
இரு பக்கம் நெல்வரப்புகள். நடுவே ரோடு. அங்குமிங்கும் தென்னந்தோப்புகள்; வயல்கள் இடையிடையே வீசி வரும் தென்றல் காற்று !
தாத்தா கோவிந்தன் மேலேயும் பேரன் ரவி மேலேயும் மென்மையாக அந்தக் காலை வேளையில் மிதமாக அவர்களது மேனியில் படரத்தொடங்கியது.
“தாத்தா நான் தினந்தோறும் ஸ்கூலுக்கு நம்ம வீட்டிலேயிருந்து ஒன்றரை மையில் தூரம் நானும் என்னோட படிக்கிற பசங்களும் நடந்தேபோறோம் “
“அப்ப நீங்க எங்களை இந்த மாட்டு வண்டியிலே ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடலாமில்ல”! பேரன் கேட்கவும்
அதற்கு அவர் , நான் ஸ்கூலுக்கு உன்னையும் உன்னோட படிக்கிற பையங்களையும் கொண்டு போய்விடலாமுன்னு ஆசைதான்! ஆனா, நான் காலையிலே விவசாயவேலைக்கு போய் ஆகனுமே,
அதனால் நான் வரமுடியலடா “!
“சரிங்க தாத்தா சும்மா சொன்னே !”
“நீ சும்மா சொன்னாலும் விளையாட்டா சொன்னாலும் அதுதாம்பா நிஜம்”!
தனது பேரனிடம் பேசிக்கொண்டே மாட்டு வண்டியின் வேகத்தை துரிதப்படுத்தினார் கோவிந்தன் . அவர் செல்லக்கூடிய பொது சந்தை ஊரிலிருந்து பத்துகிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.
மாதத்திற்கு ஒருமுறை கோவிந்தன் மாட்டுவண்டியில் சந்தைக்கு செல்வார். தேவையான பொருட்களை வாங்கி வருவார். இந்தத் தடவை தனது பேரன் அவருடன் வருவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது நெல் வரப்பில் வேலைசெய்து கொண்டிருந்த பெண்கள் சிலர் மாட்டு வண்டியைப் பார்த்து,
“கோவிந்த அண்ணே! சந்தைக்கு பேரனோடு போறமாதிரி தெரியுது”
“ஆமாம்மா! பேரன் சந்தைக்கு வர்றேன்னு சொன்னான், அதனால நானும் கூட்டிட்டு போறேன்மா “என்று பதிலளித்து விட்டு வண்டியை வேகமாக ஓட்ட மாட்டை சாட்டை குச்சியால் அழுத்தி வேகமாக சென்றார்.
மாட்டு வண்டி சென்று கொண்டிருந்த போது எங்கோ விசேச வீட்டிலிருந்து ஒருபழைய பாட்டு இனிமையாக அவர் காதில் விழுந்தது! அதை ரசித்துக் கொண்டே தலையை ஆட்டிக்கொண்டு ஓட்டினார், கோவிந்தன் தலைப் பாகையைத் தடவிக் கொண்டார்.
சிறு நேரம் சென்றது. வண்டி சென்று கொண்டிருந்த போது அவர் கண்ணில் ஊரை காக்கும் அய்யனார் கோவில் தென்பட்டது. சிரித்துக் கொண்டே மாட்டு வண்டியின் வேகத்தை குறைத்து அய்யனார் கோவில்முன்பு நிறுத்தினார்.
அந்தக் கோவில் பெரிய அரசமரம் அருகில் இருந்தது. அது பழமையான கோவில்! ஒவ்வொரு முறையும் கோவிந்த தாத்தா சந்தைக்கு போகும் போது அய்யனாரை வணங்கி விட்டு தான்செல்வார்”. என்ன தாத்தா வண்டியை கோவில் முன்னாடி நிறுத்துறீங்க? சாமி கும்பிட வா ?” எனக் கேட்டான் பேரன் ரவி”
ஆமாம்பா நான் சந்தைக்கு போறப்பயெல்லாம் இந்த அய்யனாரைக் கும்பிட்டுதான் போவேன்.
ஊருஉலகத்தையே காக்குறவர்ரு அவர்” என்றுக் கூறிக்கொண்டு கோவில்வாசல் ஓரம் மாட்டுவண்டியை நிறுத்தினார் கோவிந்தன்.
“தாத்தா இது என்னசாமி ?”
“இதுதான் அய்யனார் சாமிடா!”
கோவிலைச் சுற்றிபார்த்த பேரன் ரவி, ஏன் வாசல்ல மரஇலை குப்பையா இருக்கு? இதை யாரும் சுத்தப் படுத்த வரமாட்டாங்களா “
“இந்த கிராமத்துல இது ரெம்ப பழையகோயிலு. முன்னாடி இந்தக் கோவில் நல்ல அழகா சுத்தமா இருந்தது இப்ப ஊர்க்காரங்கள் சண்டை போட்டதிலிருந்து இதை யாரும் கவனிக்காம அப்படியே விட்டுட்டாங்க.
ஒரு வயசான பாட்டி வார வாரம் கோவில் வாசல்ல சுத்த படுத்திச்சி இப்ப அந்தக்கிழவியும் இறந்துபோச்சி !
அதனால கோவிலயாரும் கண்டுக்கல. விருப்பமுள்ளவங்க கோவில் வாசலை சுத்தப் படுத்துவாங்க இல்லையின்னா இப்படித்தான் இலைக்குப்பையா கிடக்கும்!”
“சரிங்க தாத்தா ஊர்க்காரங்க சண்டை போட்டதுனால கோவில யாரும் சுத்தப்படுத்தல
அவங்க ஒன்னு சேர்ந்தா கோவில் சுத்தமாகுமில்ல”
எப்படி ஒன்னு சேர்வாங்க?”எல்லாம் பதவி சண்டைதான். தலைவர் பதவிக்கு அவங்களுக்குள்ளே அதிகார சண்டை!
இவங்க எப்ப விட்டுக் கொடுத்து ஒன்னு சேருவது. எல்லாம் இந்த அய்யனார் கிட்டத்தான் இருக்கு !
என்றபடி தாத்தா கோவிந்தன் பேரனை அய்யனார் சாமியை பார்த்து வணங்கச் சொன்னார் !
பேரன் ரவி மாட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.
தாத்தா இந்த ஊரையே காப்பாத்துன சாமியை இப்ப யாருமே கண்டுக்காம இருந்தா ஞாயமா தாத்தா?”
“அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? வந்தோமா சாமியை கும்பிட்டு போனோமா அப்பிடித்தான் இருக்கணும் !”
“அப்படி நாம கண்டுக்காம இருக்கலாமா தாத்தா ?”
“இந்த விசயத்தில நாமஎன்ன செய்ய முடியும்பா? ஊர் பிரச்சினையை நாம் தீர்த்து வைக்கமுடியுமா ?”
“ஊர் பிரச்சினையை தீர்த்து வைக்கமுடியாது தாத்தா. ஆனா, கோவில் வாசலை யாவது சுத்தப்படுத்தலாமில்ல!
“என்ன கோவில் வாசலை சுத்தப்படுத்தவா ?”
“ஆமாம்! தாத்தா இந்த அய்யனார்கோவில்ல மரத்தோட இலைகள் உதிர்ந்து குப்பையாகக் கிடக்குது இதை நம்மனால முடிஞ்ச வரைக்கும் சுத்தப்படுத்த முடியும் தாத்தா “
“ஏற்கனவே வயசான பாட்டி கோவில் வாசல்ல சுத்தப்படுத்தினாங்கன்னு சொல்றீங்களே! இப்ப அந்த பாட்டி இறந்ததுனால அந்த வேலையை யாராவது பாக்கலாமில்ல தாத்தா! ஏன்அதையே நாம்பார்த்தா என்ன ?”
என்று பேரன் ரவி சொல்லவும் தாத்தா கோவிந்தன் யோசிக்கத் தொடங்கினார் .
“நாம எப்படிப்பா கோவில் வாசல்ல சுத்தப்படுத்த முடியும்? “
“நீங்க செய்யாதீங்க தாத்தா நானும் என்னோட படிக்கிறபசங்களும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா செய்வோம் அதுவும் லீவு நாளிலே ஒரு அரைமணி நேரம் கோவில் வாசலை கூட்டி சுத்தப்படுத்துவோம் தாத்தா
நீங்களும் மாதா மாதம் சந்தைக்கு போற வழியில இந்த அய்யனார் சாமியை கும்பிடும்போது கோவில்வாசல் சுத்தமாஇருந்தா நல்லா இருக்குமே !
இடங்களை சுத்தமா வச்சாத்தானே ஜனங்களும் இங்கவந்து சாமி கும்பிடுவாங்க. சுத்தமா இருக்குறது தப்பா தாத்தா ?”
நாங்க படிக்கும் பள்ளிக்கூடத்திலே சுத்தத்தை பத்தியும் பாடம் நடத்துவாங்க தாத்தா
அப்பத்தான் நோய் இல்லாம வாழலாமுன்னு சொல்றாங்க தாத்தா அதுவும் நம்ம ஊர்ல இருக்குற கோவில்ல சுத்தமில்லாம வச்சாதப்பில்லையா ?
இன்னிக்கே நான்படிக்கிற பசங்க கிட்ட சொல்லிடுறேன். அதோட ஸ்கூல் டீச்சர்கள் கிட்டேயும் சொல்லிடுறேன். அவங்களும் எங்களுக்கு ஆதரவு தருவாங்க தாத்தா !”
தாத்தா கோவிந்தனுக்கு பேரன் ரவி சொன்ன விசயம் சரி எனப்பட்டது உடனே அவரே தனது பேரனிடம் ,
“மாதம் மாதம் நான் சந்தைக்கு போறப்ப இந்த அய்யனாரைக் கும்பிட்டு மட்டும் போயிடுவேன் ஆனா
சாமி வாசலிருக்கும் சுத்தத்தை பத்திகொஞ்சம் கூட நினைக்காமல் சுயநலமாய் இருந்துட்டு போயிட்டேனே!
“நீ சொன்ன விசியம் எனக்கு தோனாமல் போயிடிச்சி! இனிநானும் சந்தைக்கு போறப்ப என்னால் முடிஞ்ச வேலையைக் கொஞ்ச நேரம் செஞ்சிட்டு போறேன்.
உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு சுத்தத்தைப் பத்தி எனக்கு நல்லா புரிய வச்சிட்டேயடா”
என்று தனது பேரன் தோளை தட்டி பாராட்டினார்.
உடனே பேரன் ரவி “தாத்தா இன்னிக்கு இந்தக் கோவில்வாசலை கொஞ்சநேரம் சுத்தப்படுத்திட்டு சந்தைக்கு போவோம் தாத்தா!” என்றான்
கோவிந்தன்” சரிப்பா “என்றபடி கோவில் வாசலில் சிதறிக்கிடந்த இலைகளை அப்புறப் படுத்த சம்மதம் கொடுத்தார்!
பேரனும், தாத்தாவும் சேர்ந்து அய்யனார்கோவில் வாசலைச் சுத்தப்படுத்தத் தொடங்கும் போது ,
அந்த நேரம் திடீரென்று” நாங்களும் கோவில்வாசலை சுத்தப்படுத்த வர்றோம்” என்று குரல் கேட்டுதிரும்பி பார்த்தனர்!
ஒரே ஆச்சரியம்! அந்த ஊர்க்காரர்களில் சிலரும் வயல் வரப்பில் வேலை செய்த சிலரும் நின்று கொண்டிருந்தனர்!
“இவ்வளவு நேரம் தாத்தாவும் பேரனும் பேசுறதைக் கேட்டோம். நீங்க சொன்னது ஞாயமா எங்களுக்குப்பட்டது! இனி நாங்களும் வேலைமுடிஞ்சி போகும்போது இந்தக் கோவில் வாசலை சுத்தப்படித்திட்டு போறோம்”! என்று கூறியவாறு அவர்களும் அய்யனார் கோவில் வாசலை சுத்தப்படுத்த ஆரம்பித்தனர்!
தாத்தாவும் பேரனும் மகிழ்ச்சியடைந்தனர்!