மாஸ்கோ, அக். 19–
உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்தார்.
சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உடன் நடந்து வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குச் செல்ல உள்ளார்.
இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:–
மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
உக்ரைனுடனான பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால் உக்ரைன் தான் அமைதிப் பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்டது. இந்தப் பிரச்சினை வலுக்க அமெரிக்கா தான் காரணம். உலக நாடுகள் பலவும், ஏன் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகள் கூட இப்போதெல்லாம் அமெரிக்க டாலரை வைத்து பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இருந்து பின் வாங்குகின்றனர். சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவும்– சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது. எங்களது உறவு சர்வதேச ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கிறது.
மேலும் பிரிக்ஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியதுபோல் இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. பிரிக்ஸ் உலகளாவிய தெற்கு, தென்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியில் கவனத்தை குவிக்கிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்யும் நாடுகளாக உருவெடுத்து வருகிறது.
இவ்வாறு புதின் கூறினார்.
பிரிக்ஸ் திரைப்பட விழா
பிரிக்ஸ் நாடுகள் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு புதின், “பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் இந்தியப் படங்கள் ரஷ்யாவில் மிகவும் பிரபலம். இங்கே நிறைய இந்தியப் படங்களின் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும் இந்திய திரைப்படங்களை திரையிடவே பிரத்யேக தொலைக்காட்சியும் ரஷ்யாவில் உள்ளது. நாங்கள் ரஷ்ய திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்துகிறோம். இந்த ஆண்டு பிரிக்ஸ் திரைப்பட விழாவும் நடத்தவிருக்கிறோம். அதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய திரைத்துறை விரும்பினால் அவற்றை இங்கே மேலும் ஊக்குவிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்வோம்” என்று கூறியுள்ளார்.