சென்னை, பிப். 17–
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:–
“மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது. அரசியல் சாசனம் உருவாக்கிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது.
ப.சிதம்பரம் கண்டனம்
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை. உண்மையில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளாவது அவருக்குத் தெரியுமா?
நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை, இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.