செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு

சென்னை, செப். 8–

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

ஜாமீன் மனு தாக்கல்

இதனையடுத்து எந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *