சென்னை, ஆக. 18–
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை, எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அவரை 5 நாள்கள் காவலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதன் பிறகு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
தொடர்ந்து, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.