டெல்லி, ஜூலை 18–
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேல்முறையீடு
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.