அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி, ஜூன் 19–
அமைச்சர் செந்தில் பலாஜி விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது முதல் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, அவருடைய உடல் நிலையை, காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 8 நாள் விசாரணைக்கு அமலாக்கத்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்ற அமலக்கத்துறை வைத்த கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கலாம் என நீதிபதி சூரிய காந்த் அமர்வு தெரிவித்துள்ளது.