சென்னை, ஏப்.28-–
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் இடம்பெறுகிறார்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. செப்டம்பர் 29-ந் தேதி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். இதையே காரணமாக வைத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது.
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரியபோது அமைச்சராக இல்லாததால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படை காரணத்தை வைத்துதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை வழக்கு விசாரணையின்போது சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட், செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? அல்லது அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்புக்கு காட்டமாக கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பொன்முடி ராஜினாமா
அதேபோன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் பற்றி மாணவ பருவத்தில் மேடைகளில் பட்டிமன்றத்தில் பேசியதை நினைவுகூர்ந்து பேசினார். அதில் சில பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பியதால், பொன்முடி மீது வைக்கப்பட்ட விமர்சனத்தால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இருந்தபோதிலும், இந்த சர்ச்சை பேச்சு விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த சென்னை ஐகோர்ட், அமைச்சர் பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியது.
இதேபோன்று பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஐகோர்ட் எழுப்பிய கேள்விகளால் பொன்முடியையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு தி.மு.க. அரசு தள்ளப்பட்டது. இதனைடுத்து அமைச்சர் பொன்முடியும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சரிடம் கொடுத்தார்.
இந்த ராஜினாமா கடிதங்கள் அடிப்படையில் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரை கடிதத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த அமைச்சரவை மாற்றத்துக்கான ஒப்புதலையும், உயர் அதிகாரி மூலம் கவர்னர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இன்று முதலமைச்சர் பரிந்துரையின்படி புதிய அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ் பால்வளத்துறையை ஏற்க உள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த பால்வளத்துறை மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பொன்முடியிடம் இருந்த வனத்துறையுடன் காதி துறையும் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.