செய்திகள்

அமெரிக்க மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Makkal Kural Official

வில்மிங்டன், செப் 23

இந்தோ-பசிபிக் வளர்ச்சியே எங்களது நோக்கம் ஆகும். குவாட் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

குவாட் உச்சி மாநாடு

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த குவாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா நடத்த இருந்தது. ஆனால் இதை நடத்துவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்து இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது. இதை இந்தியா ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த மாநாட்டை அமெரிக்கா நடத்தியது.

அதன்படி அங்குள்ள டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நேற்று இந்த மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார்.

வில்மிங்டன் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாநாட்டை நடத்தினார். இதில் பிரதமர் மோடியுடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் குவாட் அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளை ஆய்வு செய்த தலைவர்கள், அவற்றை வேகப்படுத்த முடிவு செய்தனர்.

மேலும் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில் உள்ள கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக புதுமையான வழிகளையும் குவாட் தலைவர்கள் விவாதிததனர்.

மேலும் பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப நெட்வொர்க் ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாகவும், மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர் போன்ற சவால்களால் ஏற்பட்டுள்ள சர்வதேச பதற்றம் குறித்தும், வட கொரியாவின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

உச்சி மாநாட்டில் பேசிய 4 தலைவர்களும் உலகளாவிய நன்மைக்கான சக்தியாக குவாட் இருப்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகளாவிய சமூகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளையும் அறிவித்தனர்.

பிரதமர் மோடி உரை

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுவாக வெளிப்படுத்தினார்.

மேலும் குவாட் பிராந்தியத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு தொடர்ந்து உதவுவதோடு, நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதை துரிதப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் வெளியிட்டார்.

இந்திய எல்லை மற்றும் தென்சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக்கடல் பகுதியில் அத்துமீறும் சீனாவையும் மறைமுகமாக தனது உரையில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

அதன்படி குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

யாருக்கும் எதிரானவர்கள் அல்ல

உலகை சுற்றிலும் பதற்றமும், மோதல்களும் நிறைந்திருக்கும் நிலையில், குவாட் தலைவர்கள் இங்கே சந்தித்து இருக்கிறோம். இந்த நேரத்தில் குவாட் அமைப்பு தனது ஜனநாயக மதிப்பீடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது முழு மனித இனத்துக்கும் முக்கியமானதாகும்.

சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கம் நிறைந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியமே நமது நோக்கம்.

நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, இறையாண்மையை மதித்தல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு ஆகியவற்றை நாம் ஆதரிக்கிறோம்.

நமது செய்தி தெளிவானது. அதாவது இயல்பை தொடர்தல், உதவி புரிதல், கூட்டாளியாக இருத்தல், தேவைகளை பூர்த்தி செய்தலுக்குமே குவாட் உள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாம் ஒன்றாக பல நேர்மறையான மற்றும் உள்ளடக்கிய முயற்சிகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.62 கோடி

குவாட் உச்சி மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக அதிகரித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி சிறப்பு நிதியை அறிவித்தார்.

அந்தவகையில் புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்காக 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.62 கோடி) மானியமாக அளிப்பதாக பிரதமர் மோடி மாநாட்டில் தெரிவித்தார்.

இது குறித்து அவர், ‘புற்றுநோய் சிகிச்சையில் எங்கள் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது. ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற இந்தியாவின் பார்வையின் கீழ் இந்த மானியம் அளிக்கப்படும். மேலும் கதிரியக்க சிகிச்சை மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் இந்தியா உதவும்’ என்று கூறினார்.

குவாட்டின் செயல்பாடு நாடுகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கானதாகவும் இருக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, இதுவே நமது மனிதகுலம் சார்ந்த அணுகுமுறையின் உண்மையான சாராம்சம் என்றும் தெரிவித்தார்.

இதைத்தவிர மேலும் பல்வேறு திட்டங்கள் குவாட் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

இனிமையான விவாதம்

மேலும் விரைவில் பதவிக்காலம் முடிவுக்கு வரும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இருவருக்கும் குவாட் உச்சி மாநாட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

குவாட் அமைப்புக்கு இரு தலைவர்களும் ஆற்றிய பங்களிப்பை பிற உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினர்.

இவ்வாறு குவாட் உச்சி மாநாடு சிறப்பாக நடந்தது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், ‘வில்மிங்டன் நகரில் குவாட் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநாட்டில் இனிமையான விவாதங்கள் இருந்தன. உலகளாவிய நன்மைக்காக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து விவாதித்து இருக்கிறோம். சுகாதாரம், தொழில்நுட்பம், பருவநிலை மாறுபாடு, திறன் உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இணைந்து செயல்படுவோம்’ என குறிப்பிட்டு இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *