செய்திகள்

அமெரிக்க அரசு ஊழியர்கள் சீன பெண்களுடன் காதல், பாலியல் உறவு கூடாது: அமெரிக்க அரசு

Makkal Kural Official

நியூயார்க், ஏப். 9–

சீனாவில் உள்ள தனது பணியாளர்கள், மற்றும் ஒப்பந்ததாரர்கள், சீன குடிமக்களுடன் எந்தவொரு காதல் அல்லது பாலியல் உறவுகளையும் வைத்திருப்பதை தடைசெய்துள்ளதாக அமெரிக்க அரசின் தகவல் வெளியாகியுள்ளது.

சில அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற உறவுகளுக்கு கடுமையான விதிகளைக் கொண்டிருந்தாலும், பனிப்போருக்குப் பிறகு, இதுபோன்ற கொள்கை அறிவிப்பு வெளிப்படையாகக் கேள்விப்படாத ஒன்றாகவே உள்ளது. மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் உள்ளூர்வாசிகளுடன் டேட்டிங் செய்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது அசாதாரணமானது அல்ல.

இந்தப் புதிய கொள்கை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை உள்ளடக்கியதோடு மட்டுமின்றி பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் மற்றும் குவாங்சோ, ஷாங்காய், ஷென்யாங் மற்றும் வுஹானில் உள்ள தூதரகங்கள், ஹாங்காங்கின் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவையும் அடங்கும். இந்த அறிவிப்பு சீனாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க பணியாளர்களுக்குப் பொருந்தாது.

இந்தக் கொள்கைக்கு ஒரே விதிவிலக்கு சீன குடிமக்களுடன் ஏற்கனவே உறவுகளைக் கொண்டிருக்கும் அமெரிக்க பணியாளர்கள் மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்கள்; அவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டால், சீனப் பெண்ணிடம் அவர்கள் கொண்டிருக்கும் உறவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது தங்கள் பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தக் கொள்கையை மீறும் எவரும் உடனடியாக சீனாவை விட்டு வெளியேற உத்தரவிடப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைமுக கட்டுப்பாடு

இந்தக் கொள்கை அறிவிப்பு ஜனவரி மாதம் சீனாவில் உள்ள அமெரிக்க பணியாளர்களுக்கு வாய்மொழியாகவும், மின்னணு முறையிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பகிரங்கமாக பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. உலகெங்கிலும் உள்ள புலனாய்வு சேவைகள், பனிப்போரின்போது எதிரி நாட்டின் முக்கியமான தகவல்களைப் பெற கவர்ச்சிகரமான ஆண்களையும், பெண்களையும் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றன.

சீனாவில் அலுவலகங்களைக் கொண்ட வெளியுறவுத்துறை மற்றும் பிற நிறுவனங்கள், அங்கு நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க பணியாளர்களுக்கான தனிப்பட்ட உறவுகள் குறித்து கடுமையான விதிமுறைகளை நீண்ட காலமாக விதித்து வருகின்றன. அதேபோல் ரஷ்யா அல்லது கியூபா போன்ற நாடுகள் அதிக உளவுத்துறை அச்சுறுத்தல்களைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அமெரிக்க ரகசியங்களை அணுகுவதற்கு பெய்ஜிங் தொடர்ந்து பெண்களை பயன்படுத்துவதாக அமெரிக்க இராஜதந்திரிகளும், உளவுத்துறை நிபுணர்களும் கூறுகின்றனர். இந்தத் தடை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனாவும் வெளிநாடுகளில் உள்ள தனது பணியாளர்கள் மீது ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளை இறுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *