வாஷிங்டன், நவ. 1–
அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரம்ப்புக்கான ஆதரவு பெருகியிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. எனவே, இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்களை கவர்வதற்கு இரு வேட்பாளர்களும் முயன்று வருகின்றனர். குறிப்பாக, கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், எப்படியாவது அவரை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவாழ் இந்தியர்களின் மனதில் இடம் பிடிக்க டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
கமலா ஹாரிஸ்
இந்நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உலகம் முழுவதும் உள்ள 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் நாங்களும் தீப ஒளியை ஏற்றி, தீமைக்கு எதிராக நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் கொண்டாடுகிறோம். தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப்
இதேபோல் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்ப், வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில்,
“அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமாலா ஹாரிசுக்கு இந்துக்கள் மீது அக்கறையில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க விட்டிருக்க மாட்டேன். அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கமலாவும், பிடனும் புறக்கணித்து விட்டார்கள். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் கமலாவும், ஜோ பிடனும் பெரிய இடராக நமக்கு அமைந்துவிட்டார்கள். ஆனால், நான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். வலிமை மூலம் உலகில் அமைதியை திரும்பக் கொண்டு வருவோம். இடதுசாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து அமெரிக்க இந்துக்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம்.
கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சிறு வணிகத்தையெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் அழித்துவிடுவார். ஆனால், என்னுடைய தலைமையிலான நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.