வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு தகவல்
வாஷிங்டன், ஆக. 23–
ஜி20 நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செப்டம்பர் 7-ஆம் தேதி 4 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலாளர் கரின் ஜான் பியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியா வர உள்ளார். செப்டம்பர் 7 ந்தேதி முதல் செப்டம்பர் 10 ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஜோ பிடன் இந்தியாவில் இருப்பார்.
மாநாட்டின் நோக்கம்
இந்த மாநாட்டில், ரஷியா-உக்ரைன் இடையிலான போரால் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவது உள்பட உலகளாவிய பிரச்னைகளை கையாள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து அதிபர் பைடன் உள்ளிட்ட தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். வறுமை ஒழிப்பு, உலக வங்கி உள்பட பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. ஜி20 கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.