வாஷிங்டன், பிப்.6–
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாலை 12.50 மணியளவில் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன. இதனை தொடர்ந்து, ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதில், சம்பவ பகுதியில் இருந்து காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். எனினும், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி ஷெரீப் அலுவலகம் கூறும்போது, பாயிண்ட் ரெயீஸ் டிரைவ் பகுதியில் எண்ணற்ற துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது தெரியவில்லை. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
சம்பவம் நடந்தபோது, குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் ஏதேனும் புகைப்படங்கள் இருக்கின்றனவா? என்றும் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகம் கேட்டுள்ளது.