நியூயார்க், டிச. 26–
அமெரிக்காவில் வெடிகுண்டு சூறாவளி எனும் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசுகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல், பல மாகாணங்களை தாக்கி வருவதால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
சாலை, ரயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக் கிடப்பதால் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கின்றனர். அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.