வாஷிங்டன், மே 22–
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இங்கு திடீரனெ பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவரது விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்த போது, ”பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோஷம் எழுப்பினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் கூறியதாவது:–
யூத சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது எல்லை மீறி உள்ளது. இந்த மோசமான குற்றவாளியை நாங்கள் நீதியின் முன் நிறுத்துவோம். இந்த குற்றச் செயலுக்குப் பொறுப்பானவர்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
உலகில் எல்லா இடங்களிலும் உள்ள குடிமக்களையும் பிரதிநிதிகளையும் பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாகச் செயல்படும் என்றார்.