செய்திகள்

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Makkal Kural Official

சிகாகோ, செப்.13–

17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை புறப்பட்டார். அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், சென்னை அருகே மூடப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோல், இந்த பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிலையில் 17 நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை சிகாகோவிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘குட் பை’ அமெரிக்கா என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிகாகோ விமான நிலையத்தில் கூடிய அமெரிக்க வாழ் தமிழர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி, அவரை வழியனுப்பி வைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வருகை தரும் விமானம் நாளை (14–ந்தேதி) காலை 8.30 மணியளவில் சென்னை வந்தடையும். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விளக்கத்தை முதல்வர் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *