நியூயார்க், ஏப். 11-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர்.
ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளும் பலியானதாக அமெரிக்க விமானப் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் புறப்பட்டு 18 நிமிடங்களில் ஹட்சன் ஆற்றின் பியர் 40 என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுதந்திர தேவி சிலை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை நோக்கி திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் பலியான 6 பேரின் உடலும் மீட்கப்பட்டதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை இன்னும் அரசு உறுதிப்படுத்தவில்லை.
விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.