போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார்
வாடிகன் சிட்டி, மே.9-
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக ஆக தேர்வு செய்யப்பட்டார். அவர் 14-ம் லியோ என அழைக்கப்படுவார்.
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் கர்தினால் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த 133 கார்டினல்கள் கூடினர். முதல் நாளான நேற்று முன்தினம் முதல் வாக்கெடுப்பு நடந்தது.
இதில் 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் யாரும் பெறாததால் புதிய போப் தேர்வாகவில்லை. இதை புகை போக்கி வழியாக கரும்புகை வெளியிட்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் நடந்த 2 வாக்களிப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே மாலையில் மீண்டும் கார்டினல்கள் கூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த முறை புதிய போப் ஆண்டவர் தேர்வானார்.
இது சிஸ்டைன் சிற்றாலய புகைபோக்கியில் வெண்புகையை வெளியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அப்போது வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும் புதிய போப் ஆண்டவர் யார்? என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் புனித பீட்டர் பேராலய பால்கனியில் தோன்றிய கார்டினல்கள் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதை (ஹேபிமுஸ் பாப்பம்) அறிவித்தனர்.
அதாவது அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
இதைக்கேட்டவுடன் அங்கே கூடியிருந்த அனைவரும், உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர்.
பின்னர் புதிய போப் ஆண்டவர் 14-ம் லியோ பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி பேசினார்.