புதுடெல்லி, மார்ச்.26-
தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன.
எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட இருப்பதாக தகவல் வெளியானது. சட்டசபை கூட்டம் நடந்து வரும் சூழ்நிலையில், அவரது இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்ற எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக உள்ளே சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி மட்டும் உடன் சென்றார். நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. அவரது வருகை திடீரென்று முடிவு செய்யப்பட்டதால், வழக்கமாக வரவேற்பு கொடுக்க வரும் நிர்வாகிகள், தொண்டர்களும் வரவில்லை.
டெல்லி விமான நிலையத்துக்கு பிற்பகல் 2 மணி அளவில் சென்ற எடப்பாடி பழனிசாமியை அண்ணா தி.மு.க. எம்.பி.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து டெல்லி சாகேத்தில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அவர் சென்றார்.
இந்த அலுவலகத்தில் கடந்த 10–ந்தேதி சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் இருந்து ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்தார். பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தார்..
இதற்கிடையே டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.
அங்கு அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசினர். தமிழகத்தில் நிலவும் சட்டம்–ஒழுங்கு நிலவரம் பற்றி புகார் தெரிவிக்க அண்ணா தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது அமித்ஷாவிடம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அண்ணா தி.மு.க.வின் நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்து கூறினார்.
மேலும் அரசு மீதான முறைகேடு விவாகரம் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.– அண்ணா தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக 2 கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.