சென்னை, ஜன. 22–
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்க இன்று கதிர் ஆனந்த் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
தி.மு.க பொதுச்செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த் தற்போது வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள். துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 44 மணி நேரம் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கதிர் ஆனந்த் கல்லூரியில் இருந்து 13.07 கோடி ரொக்கம் மற்றும் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை உடைத்து அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சொத்து ஆவணங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.