சிறீநகர், ஜூன் 16–
அமர்நாத் யாத்திரையில் புல்லாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு அமர்நாத் கோயில் வாரியம் தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 62 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதாரங்களுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு அமர்நாத் ஆலய வாரியம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அமர்நாத் ஆலய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
என்ன செய்ய வேண்டும்
உடல் ஆரோக்கியத்திற்காக தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இமயமலை புனித தலத்திற்கு வரும் பக்தர்கள், தினமும் காலை மற்றும் மாலை என குறைந்தது 4 முதல் 5 கிமீ வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள், குறிப்பாக ஆக்ஸிஜனை மேம்படுத்துவதற்கான பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன், அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து வர வேண்டும்.
புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, வறுத்த மற்றும் துரித உணவுப் பொருள்கள், பானங்கள் போன்ற 40 க்கும் மேலான உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சில அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச்செல்ல பரிந்துரைத்துள்ளது. என அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.