சேலம், பிப். 28–
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பங்கேற்கும் என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அண்ணா தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அண்ணா தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம். ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப்பொருட்கள், கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு கணடுகொள்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.