செய்திகள்

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு

Makkal Kural Official

சென்னை, மே.22-

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு தலா ரூ.17 லட்சம் மதிப்பில் இலவச வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் மூலம் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தினை செயல்படுத்த இந்த நிதியாண்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

எனவே அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு கரையோரம் உள்ள குடியிருப்பு களை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.

390 சதுர அடியில் வீடு

இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையில் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. அதில் ஒரு வீட்டின் விலை ரூ.17 லட்சம் ஆகும். மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூ.5 ஆயிரமும், வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2 ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும், மின்சார இணைப்பு கட்டணம் ரூ.2 ஆயிரத்து 500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஐகோர்ட் உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், நதிநீர்சீரமைப்பு திட்டம் என்பதாலும், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *