புதுடெல்லி, டிச. 9–
விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான உணவு வகைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ஏழை மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்திருப்பது, அவர்களை மிகவும் பாதிக்கின்றன. இதனால் ஏழைகளுக்கு உதவ ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதுபோன்று விவசாயத்திற்கு பயன்படும் யந்திரங்களுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளித்து விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவும் வண்ணமாக மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். கிசான் சம்மான் நிதி திட்டம், நீர் பாசன திட்டங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.