நியூயார்க், ஏப்.20–
அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது.
அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை அரசு ஊழியர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற முடிவுகளுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மொத்தம் 50 போராட்டங்கள் 1 நோக்கத்திற்காக நடத்தப்பட்டிருக்கிறது. எனவே இந்த போராட்டத்திற்கு 50501 என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இப்போராட்டங்கள் அமெரிக்க புரட்சிப் போரின் 250வது ஆண்டு நினைவாக நடத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராரடி வருகின்றனர். டவுண்டவுன், சான்பிரான்சிஸ்கோவில் ஒரு கோடிக்கும் மேல் போராட்டக்காரர்கள் திரண்டனர். இன்னும் பலகட்ட போராட்டங்கள் நடக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் அதிர்ந்து போய் உள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள துணை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி துவங்கி உள்ளது.