செய்திகள்

அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு

தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்

ஊட்டி, மார்ச் 10–

ஊட்டியில் அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ந்தேதி அதிக எண்ணிக்கையில் சத்து மாத்திரை சாப்பிட்டதாக 4 மாணவிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஊட்டியில் தனியார் காட்டேஜில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்த சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஜெய்பா பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் இரும்பு சத்து மாத்திரைகள் வியாழக்கிழமை தோறும் வழங்கப்படுகின்றன. இந்த பள்ளியில் ஒரு மாத்திரைக்கு பதிலாக மாத்திரை அட்டைகளை குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். வியாழக்கிழமை கொடுக்க வேண்டிய மாத்திரையை திங்கட்கிழமை கொடுத்துள்ளனர். எனவே பள்ளி தலைமை ஆசிரியர், மாத்திரை கொடுத்த ஆசிரியர், பகுதி செவிலியர் மற்றும் கிராம செவிலியர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *